விளையாட்டு விபரீதமானது. பாட்டியை கொன்ற பேரன்

கள்ளக்குறிச்சி மாவட்டம்,உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொனாலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஹரன்(வயது 21). இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி. அக்ரி 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையான ஹரிஹரன், அதனால் மனநலம் பாதிக்கப்பட்டார். பின்னர் ஹரிஹரனின் நடவடிக்கைகளில் மாற்றத்தை கண்ட பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய ஹரிஹரன் சில நாட்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை அருகே எல்லை கிராமத்தில் வசிக்கும் தனது பெரியப்பா மற்றும் பாட்டி வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு சென்ற ஹரிஹரன் மீ்ண்டும் மனநலம் பாதிக்கப்பட்டு தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சுயநினைவை இழந்தார்.
நள்ளிரவில் அனைவரும் உறங்கச் சென்ற பிறகு ஹரிஹரன் பப்ஜி விளையாட்டில் வருவது போல அரைகுறை ஆடையுடன் பெரியப்பா வீட்டில் இருந்து பாட்டி வீட்டிற்கு, எல்லை கிராமத்தின் வீதிகளில் ஓடினார். இதைப்பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வீட்டிற்குள் ஓடினார்கள். இந்த நிலையில் வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த தனது பாட்டி மாரியம்மாளை(85) ஹரிஹரன் கட்டை மற்றும் கற்களை கொண்டு ஆவேசமாக தாக்கி படுகொலை செய்தார். பின்னர் அவரது உடலை தூக்கி வந்து சாலையில் வைத்து, அதன் மீது அமர்ந்தபடி சில மந்திரங்களை படித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த எல்லை கிராம மக்கள் ஹரிஹரனை சுற்றி வளைத்து தாக்கி அவரை எலவனாசூர் கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். கொலைசெய்யப்பட்டு கிடந்த மாரியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பப்ஜி விளையாடி மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் அவரது பாட்டியையே அடித்து கொலை செய்த சம்பவம் எல்லை கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu