திருவண்ணாமலையில் சித்தர்கள் அதிகம் ஏன்...?

அண்ணாமலையார் கோயில் (பைல் படம்).
அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றனர். சுமார் 260 கோடி வருடப் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்! மலையே சிவம். அதாவது சிவலிங்கம். அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்கின்றனர். இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகின்றன. இதனால் மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும், ஒவ்வொரு பிரதோஷ நாளிலும், சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும், சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம் வந்து, ஈசனை வணங்கி வழிபடுகிறார்கள் என்பதாக ஐதீகம்!
மலையின் மகாத்மியம் மலையளவு இருக்கின்றன. திருவண்ணாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரம், நம்மைப் போன்ற பக்தர்களுக்கான திருத்தலம் தான். ஆனால் அது… சித்தர்களின் பூமி. புனித பூமி. எத்தனையோ சித்தர்கள், இங்கு வந்திருக்கிறார்கள். வந்து தவமிருந்திருக்கிறார்கள். திரும்ப மனமில்லாமலேயே இங்கேயே தங்கி, ஜீவ சமாதியாகி இன்னும் தவத்தில் மூழ்கியிருக்கிறார்கள். இன்றைக்கும் சூட்சும ரூபமாய் இருந்து, தவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதாக ஐதீகம்! ஏன் சித்தர்கள் பூமியாக திருவண்ணாமலை இருக்கிறது ?
நம் மன அதிர்வுகளை புத்தி தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வராமல் எத்தகைய சித்துக்களையும் செய்ய இயலாது. இயல்பாகவே புவியியல் அமைப்பிலேயே எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய அதிர்வுகளை கொண்டு திருவண்ணாமலையானது அமைந்துள்ளது. நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம், கவலை ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். இந்நிலையில் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. நம் ஓய்வெடுக்கும் போது (ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள் என கூறுகின்றனர். முயற்சி செய்தால் நம் எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அதை தீட்டா அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள். நம் எண்ணங்களை நம் இயக்கங்களை எளிதாக நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதற்காகவே உலகெங்கிலும் உள்ள சித்தர்கள் இங்கே தேடி வருகின்றனர் .
திருவண்ணாமலையானது இயல்பாகவே தீட்டா அதிர்வுகளை கொண்டு உள்ளது. இதனால் தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். இதற்காகவே இங்கே சித்தர்கள் சமாதி அடைந்திருக்கிறார்கள். சித்தர்களின் பூமியாக திருவண்ணாமலை விளங்கும் மர்மம் இதுதான்..
இறைவன் எங்கு குடியிருக்கிறானோ அங்குதான் சித்தர்களும் குடியிருப்பார்கள். சித்தர்களுக்கு எல்லாம் தலயாயச் சித்தர் ஆத சித்தர் சிவபெருமான் தான். தலைவர் இருக்கும் இடத்தில்தானே தொண்டர்களும் குடியிருப்பார்கள்?அதனால் தான் திருவண்ணாமலையில் சிவ பெருமானுக்கு உறுதுணையாக, காலம் காலமாக நாம் பெரிதும் போற்றும் பதினெட்டு சித்தர்களும், அவர்களுக்கு பக்கபலமாக 188 சித்தர்களும் இன்றும் அரூபமாக நடமாடி கொண்டு இருக்கிறார்கள். கைலாய மலையில் கூட காண கிடைக்காத அதிசயம் இது.
அத்திரி மகரிஷி, மச்ச முனிவர், கோரக்கர், ராம தேவர், துர்வாசர், சட்டை முனிவர், அகத்தியர், போகர், புசுண்டர், உரோமா சித்தர், யூகி முனிவர், சுந்தரானந்தர், அழகனந்தா, பிரம்ம முனி, காலங்கி நாதர், நந்தி தேவர், தன்வந்திரி, குரு ராஜரிஷி, கொங்கனர், உதயகிரிச் சித்தர், பிகுஞ்சக ரிஷி, மேக சஞசார ரிஷி, தத்துவ ஞான சித்தர், காளமீகா ரிஷி, விடன முனிவர், யாகோபு முனிவர், அமுத மகரிஷி, சூதமா முனிவர், சிவத்தியான முனிவர், பூபால முனிவர், முத்து வீரமா ரிஷி, ஜெயமுனி, சிறு வீரமா முனி, வேதமுனி, சங்கமுனி, காசிபமுனி, பதஞ்சலி முனி, வியாகிரம மகாரிஷி, ஜனகமா முனி, சிவப்பிரம்ம முனி, பராச முனி, வல்ல சித்தர், அஸ்வணி தேவர், குதம்பைச் சித்தர், புண்ணாக்கு சித்தர், யோகச்சித்தர், கஞ்சமலைச் சித்தர், திருமூலநாதர், மவுனச்சித்தர், தேகசித்திக் சித்தர், வரரிஷி, கவு பாலச்சித்தர், மதிராஜ ரிஷி, கவுதம், தேரையர், விசுவனித் தேவர், அம்பிக்கானந்தர், டமாரானந்தர், கையாட்டிச்சித்தர், கண்ணானந்த சித்தானந்தம், சச்சிதானந்தம், கணநாதர், சிவானந்தர், சூரியானந்தர், சோகுபானந்தர், தட்சிணா மூர்த்தி, ரமநாதர் மதி சீல மகாமுனி, பெரு அகத்தியன், கம்பளி நாதர், புலஸ்தியர், திரி காலாக்கயான முனி, அருட் சித்தர், கவுன குளிகைச்சித்தர், ராஜரிஷி வசந்தமாமுனி, போதமுனி, காங்கேய ரிஷி, கான்சன முனி, நீயான சமாதிச்சித்தர், சாந்த மஹா ரிஷி, வாசியோகச்சித்தர்,வாத சாந்த மகாரிஷி, காலாட்டிச்சித்தர், சத்தரிஷி, தேவ மகரிஷி, பற்ப மகாரிஷி, நவநாதச்சித்தர், அடவிச்சித்தர், நாதந்தச்சித்தர், ஜோதிரிஷி, பிரம்மானந்த ரிஷி, அநுமாதிச்சித்தர்,ஜெகராஜ ரிஷி, நாமுனிச்சித்தர், வாசுதேவ மகாரிஷி, பாலையானந்தர்,தொழுகன்னிச்சித்தர் என இருநூற்றுக்கும் அதிகமான சித்தர்கள் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்ததாகவும், அவற்றில் சுமார் 25க்கும் அதிகமான சித்தர்கள் இங்கு ஜீவசமாதி ஆனதாகவும் அகத்தியர் தான் இயற்றிய அகத்தியப் பெருமான் ஜீவநாடியில் எடுத்துரைத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu