திருவண்ணாமலையில் வீட்டு மனை கோரி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் நகாத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் 100 நாள் வேலை கேட்டு மாநிலம் தழுவிய மனு கொடுக்கும் போராட்டம் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வளாகத்தில் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளை சரியாக கணக்கெடுத்து அவர்களுக்கு ஆண்டு முழுவருடத்தில் மனித வேலை நாட்களை கணக்கிட வேண்டும்,வேலை கேட்டு மனு 6-ம் நம்பர் படிவம் கொடுக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் வகையில் பணியிடங்கள் குறித்தும், வேலை குறித்தும் வேலை திட்டத்தினை உருவாக்க வேண்டும், சிறப்பு கிராமசபை கூட்டங்களை நடத்தி வேலை திட்டத்தை தீர்மானமாக நிறைவேற்றிட வேண்டும், திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தில் அரசாணை 52-ன் படி தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு 4 மணி நேர வேலை மற்றும் முழு கூலி வழங்க உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
முடிவில் மாவட்ட பொருளாளர் சத்யா நன்றி கூறினார்.
இதே போல் வந்தவாசி நகா்ப்புறத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை வழங்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலா் ரகமத்துல்லா தலைமை வகித்தாா். வட்டார நிா்வாகிகள் சுப்பிரமணி, நாராயணன், செய்யது உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.தங்கராஜ், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் முத்தையன், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் மோகன்குமாா், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் வெங்கடேசன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
மேலும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைச் செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆரணி கிழக்கு, மேற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
முழு கூலி வழங்குவது உறுதிப்படுத்த வேண்டும், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளை சரியாக கணக்கெடுத்து அவர்களுக்கு 100 நாள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் வகையில் பணியிடங்கள் குறித்தும், வேலைகள் குறித்தும், வேலை திட்டத்தை உருவாக்க வேண்டும், 2022-ம் ஆண்டு 100 நாள் வேலையில் பணி முடிக்காமல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் கோரிக்கை மனுவினை ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தேசிய வேலை உறுதி அளிப்பு திட்ட அலுவலரான வாணியிடம் வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu