டிரான்ஸ்பார்மர் பழுதானதால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்

டிரான்ஸ்பார்மர் பழுதானதால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டிரான்ஸ்பார்மர் 20 நாட்களாக பழுதானதால் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வந்தவாசி அருகே டிரான்ஸ்பார்மர் 20 நாட்களாக பழுதானதால் மின்சாரம் இல்லாமல் பயிர்கள் கருகும் அவலம் ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சாலவேடு கிராமம் திப்பம்மாள் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஒரு டிரான்ஸ்பார்மர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பழுதானது. இதனால் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் தண்ணீர் இல்லாமல் முற்றிலும் காய்ந்து போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தற்போது கோடை காலம் என்பதால் 20 நாட்களாக மின்சாரம் இல்லாத காரணத்தால் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள், கத்திரிக்காய் செடிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் முற்றிலும் காய்ந்து போனதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் நகைகளை அடகு வைத்து விவசாயிகள் விவசாயம் செய்து வரும் நிலையில் 20 நாட்களாக பழுதான டிரான்ஸ்பார்மரை மின்சாரத்துறை அதிகாரிகள் சரி செய்யாமல் உள்ளதை கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளும் பொதுமக்களும் வந்தவாசி - மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வந்தவாசி - மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் மின்சாரத்துறை அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை சரி செய்யவில்லை என்றால் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட போவதாக விவசாயிகள் கூறினர்.

Tags

Next Story
மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் AI பற்றி நீங்களும்  தெரிந்து கொள்ளுங்கள்!