தமிழக அளவில் முதலிடம் பிடித்த திருவண்ணாமலை உழவர் சந்தை
உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காத காய்கறிகளை விற்பனை செய்யும் திட்டத்தில் திருவண்ணாமலை உழவர் சந்தை முதலிடத்தை பிடித்துள்ளது.
HIGHLIGHTS
இந்திய உணவு பாதுகாப்பு ஆணையரகம் சார்பில் பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்காத காய்கறிகளை உற்பத்தி செய்து உழவர் சந்தையில் விற்பனை செய்யும் திட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதனடிப்படையில் திருவண்ணாமலை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் வேளாண்மைத்துறை. மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அளவில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் உழவர் சந்தைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் திருவண்ணாமலை உழவர் சந்தை தமிழக அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்றது. அதற்கான நற்சான்று திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாநில அளவில் முதலிடத்துக்கு கிடைத்துள்ள இந்த சான்றிதழை திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவிடம், கலெக்டர் முருகேஷ் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சாதனையை நிகழ்த்திய உணது பாதுகாப்புத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், உழவர் சந்தை விவசாயிகள் ஆகியோரை அமைச்சர் பெரிதும் பாராட்டினார்.