பெண் குண்டர் சட்டத்தில் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தில் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டு உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சாவடி தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சாந்தி (வயது 60), கள்ளச்சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் போளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் அனுப்பி வைத்தார்.
சாந்தி தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடாமல் இருப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தில் அவரை கைது செய்யுமாறு கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் அடிப்படையில் சாந்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். இதற்கான ஆணை சிறையில் உள்ள சாந்தியிடம் வழங்கப்பட்டது.
2 வாலிபர்கள் கைது
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த மனோகர் மகன் மதன் (வயது 24). இவரும், 17 வயது வாலிபரும் குடிபோதையில் கீழ்பென்னாத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அப்போது அரசு மேல்நிலைப்பள்ளி அருகே திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். இதனை தட்டிக் கேட்ட பஸ் டிரைவர் கோபிநாதன், கண்டக்டர் கிருஷ்ணன் ஆகியோரை தகாத வார்த்தைகளால் பேசி, பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி வழக்குப்பதிவு செய்து, மதன் மற்றும் 17 வயது வாலிபரை கைது செய்தனர்.
போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
போதையில் இருந்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆரணி டவுன் போலீஸ் ஏட்டு சத்தியமூர்த்தி என்பவர் ஆரணி நகரில் கடந்த 14-ந் தேதி இரவு ரோந்து பணி மேற்கொண்டபோது மது போதையில் இருந்ததாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு புகார் வந்தது.
அது குறித்து விசாரிக்க ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் ஏட்டு சத்தியமூர்த்தியை தொடர்ந்து கண்காணித்ததில் அவர் இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் போது மது போதையில் இருந்து வருவது தெரியவந்தது.
இதனையடுத்து அவருக்கு ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் சத்தியமூர்த்தி மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டு டாக்டர்கள் மூலம் ஆதாரம் பெற்று அனுப்பி வைக்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் ஏட்டு சத்தியமூர்த்தியை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu