திருவண்ணாமலை நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ

குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்.
திருவண்ணாமலை நகராட்சி குப்பை கிடங்கில் திடீர்னு ஏற்பட்டதால் சுமார் 5 ஏக்கரில் சேகரிக்கப்பட்டிருந்த குப்பைகள் எரிந்து நாசமாகின.
திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமாக 14 ஏக்கரில் கிரிவலப் பாதையில் உள்ள ஈசானிய திடலில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கில் திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளில் இருந்து தினந்தோறும் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் இந்த குப்பை கிடங்கில் சேமிக்கப்படுகின்றது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த குப்பை கிடங்கில் சேகரிக்கப்படும் குப்பைகள் அவ்வப்போது மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டு வந்ததால் சுற்றுப்புற மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
அதனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குப்பை கிடங்கு கடந்த நான்கு ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தி விட்டதால் தீ பரவி சுமார் 5 ஏக்கரில் சேகரிக்கப்பட்டிருந்த குப்பைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகி வருகிறது.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் குப்பை கிடங்கிற்கு வந்து தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்து வருகிறது . திருவண்ணாமலை இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை, கிரிவலப் பாதை மற்றும் வேங்கி கால் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தென்றல் நகர், மின்நகர் ,நேரு நகர் ,தமிழ் மின் நகர் , பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கரும்புகையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு தற்போது தீ அணைக்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu