பலத்த மழை காரணமாக குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழை நீர்
திருவண்ணாமலையில் பலத்த மழை காரணமாக குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியதால் குடியிருப்பு வாசிகள் அவதி
HIGHLIGHTS

குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர்
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து நொச்சி மலை கிராமத்திற்கு செல்லும் சாலை வெள்ளத்தால் மூழ்கியது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து அவ்வப்போது பெய்து வரும் மழையினால் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் எதிரில் வேங்கிக்கால் ஏரி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் வேங்கிக்கால் ஏரியும் ஒன்றாகும்.
இந்த ஏரியின் நீர் திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கிக்கால் ஊராட்சி பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் இன்று வேங்கிக்கால் ஏரி முழு கொள்ளளவையும் எட்டி உபரி நீர் வெளியேறியது.
நேற்று இரவிலும் திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. திருவண்ணாமலையில் நேற்று பெய்த மழையின் அளவு 96 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள குறிஞ்சி நகர் பகுதியில் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், நீதிமன்ற ஊழியர்கள் காவலர்கள் குடியிருக்கும் பகுதியாகும். தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
தற்பொழுது வெள்ள நீர் குடியிருப்பு பகுதி முழுவதும் தேங்கியுள்ளதால் தண்ணீரில் பல்வேறு விஷ வண்டுகளும், பூச்சிகளும் மிதந்து வீடுகளுக்கு வரும் சூழல் நிலவி வருகிறது. டெங்கு கொசு உருவாகி பகுதி முழுவதும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் சற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தாழ்வான பகுதிகளில் குறிப்பாக தண்ணீர் தேங்கும் பகுதிகளில் வெள்ள நீரை அப்புறப்படுத்தி நகர் முழுவதும் சுத்தம் செய்து டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவாத வகையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் நொச்சி மலை நாச்சிப்பட்டு பகுதிகளில் மழைநீர் தேங்கியது . இப்பகுகுதிகளில் நொச்சி மலை ஏரி உபரி நீர் செல்ல புதியதாக கால்வாய் கட்டப்பட்டும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நொச்சி மலை செல்லும் சாலை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.
குறிப்பிட்ட சில இடங்களில் கால்வாய் குறுகியுள்ளதே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் கூறினர் . மேலும் குறுகிய பகுதிகளை கண்டறிந்து அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்