பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
X

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ( பைல் படம்)

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

திருவண்ணாமலையில் காதலிக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த காதலன் மலேசியாவில் இருந்து திரும்பி வந்து காதலியை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவர்கள் பாதுகாப்பு கேட்டு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

திருவண்ணாமலை தேனி மலை பகுதியை சேர்ந்தவர் சித்ரா. இவர் நேற்று காலை தனது காதலனுடன் திருமண கோலத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்திருந்தார்.

அப்போது அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தார், அந்த மனுவில், நானும் எனது தெருவில் வசித்து வரும் வினோத்குமார் என்பவரும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வருகிறோம், அவர் மலேசியாவில் வேலை செய்கிறார். நான் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன்.

திடீரென எனது பெற்றோர் எனக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர். இது பற்றி நான் காதலித்து வந்த வினோத்குமாரிடம் தெரிவித்தேன். அவர் மலேசியாவில் இருந்து வந்தார். நானும் அவரும் கடந்த 30 ஆம் தேதி வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொண்டோம்.

இதனை கேள்விப்பட்டு எனது தந்தை மற்றும் உறவினர்களும் வினோத்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை மிரட்டி உள்ளனர், மேலும் கொலை மிரட்டலும் விடுத்திருக்கின்றனர்.

நாங்கள் மேஜர் என்பதால் விருப்பப்பட்டு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் எனவே எங்களுக்கும் எனது மாமியாருக்கும் உயிர் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறி இருந்தனர்.

இதை அடுத்து அந்த மனு மீது உரிய விசாரணை நடத்திட திருவண்ணாமலை நகர போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

இதனை அடுத்து இரு தரப்பையும் அழைத்து விசாரித்த காவல்துறையினர் தனது கணவருடன் செல்வேன் என சித்ரா உறுதியாக சொல்லி விட்டதால் போலீசார் வினோத்குமார் உடன் அனுப்பி வைத்து இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story