கூட்டுறவு நியாய விலை கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்

ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் முருகேஷ்.
தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து கூட்டுறவு நியாய விலை கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது என்று அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருவண்ணாமலை நகராட்சி காந்தி நகர் துராபலி தெருவில் உள்ள ரேஷன் கடை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பிரதான கிளை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் முக்கிய துறைகளில் ஒன்றாக கூட்டுறவுத்துறை செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 884 கூட்டுறவு நியாய விலை கடைக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெறப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 3 ஆயிரத்து 876 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 35.29 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 4.36 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 191.54 கோடி பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு கூட்டுறவுத் துறையில் வேளாண்மைக்காக ரூ.500 கோடி வரை 2 ஆயிரம் ஆரம்ப வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல்வேறு மிஷனரிகள் வாங்குவதற்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கடன் கொடுத்து கடன் வாங்கும் துறையாக கூட்டுறவுத்துறை இல்லாமல் தொழிலுக்காக கடன் கொடுக்கும் ஒரு துறையாகவும் சிறந்து விளங்குகிறது.
கூட்டுறவுத் துறையில் வேளாண் கடன் முக்கிய பங்கு வகிக்கிறது. வேளாண் கடனாக கடந்த ஆண்டில் ரூ.13 ஆயிரத்து 442 கோடி 17.44 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் எளிதில் கடன்கள் கிடைக்கக்கூடிய ஒரு துறையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியாதர்ஷினி, கூட்டுறவு மண்டல சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஜெயம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பிரதான கிளையில் மகளிர் சுய உதவி குழுக்கடன் 1 குழுவிற்கு ரூ.20 லட்சம், விதவை மற்றும் கைம்பெண்கள் கடன் 2 பேருக்கு ரூ.1 லட்சம், மாற்றுத்திறனாளிகள் கடன் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம், சிறு வணிக கடன் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம், கறவை மாடு கடன் 5 பேருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் சோமாசிபாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 14 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 39 ஆயிரம் என மொத்தம் ரூ.1 கோடியே 44 லட்சத்து 89 ஆயிரம் கடன் உதவிகளை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu