வருங்காலத்தில் தி.மு.க. பெரிய தோல்வியை சந்திக்கும்-டி.டி.வி. தினகரன்
வருங்காலத்தில் தி.மு.க. பெரிய தோல்வியை சந்திக்கும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறியிருந்தனர். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தற்போது வாய் திறப்பதே இல்லை. சொத்து வரியை 150 சதவீத அளவிற்கு உயர்த்தி உள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை ஹிட்லரைப் போல் உள்ளது. பேரறிவாளன் விடுதலைக்கு தி.மு.க. தான் காரணம் என்பது மாதிரி சொல்லி வருகிறார்.
தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார். ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் செயல்படாமல் தடுத்து வருகின்றனர். நகை கடன் தள்ளுபடி என்று அறிவித்துவிட்டு தற்போது அதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டுள்ளனர்.
எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துள்ளனர். வருங்காலத்தில் தி.மு.க. மிகப்பெரிய தோல்விகளையும், பின்னடைவும் சந்திக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.