திருவண்ணாமலை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு!

திருவண்ணாமலை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு!

ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள்

திருவண்ணாமலையில் தீபத் திருவிழா தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்

திருவண்ணாமலையில் வருகிற கார்த்திகை தீபத் திருவிழா தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில் தரமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எழில் ராஜா, இளங்கோவன், சுப்ரமணியன், சேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் அருணாச்சலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது திருமஞ்சன கோபுர வீதியில் உள்ள டீக்கடையில் அலுவலர்கள் ஆய்வு செய்தபோது சுமார் 10 கிலோ எடையுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

அங்கிருந்த 10 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஆய்வு பணியின் போது திருமஞ்சன வீதியில் உள்ள டீக்கடையில் 10 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு முறையாக இந்த கடையில் குட்கா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால் கடையின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் வருகிற கார்த்திகை தீப திருவிழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும் பணி தொடர்ந்து நடைபெற்றும்,

கடந்த ஒரு வாரத்தில் திருவண்ணாமலை 248 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது . இதில் குறைகள் கண்டறியப்பட்ட கடைகளில் இருந்து ரூபாய் 35 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது . எட்டு கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப் பணி மேலும் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார். ஆய்வின்போது உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story