நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
வந்தவாசி அருகே பைனான்ஸ் கம்பெனி மேலாளரை காரில் கடத்தி, ரூ. 16 லட்சம் கொள்ளையடித்து சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். (மாதிரி படம்)
வந்தவாசி அருகே நிதி நிறுவன மேலாளரை காரில் கடத்தி சென்ற 3 பேரை, போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.6 லட்சத்துடன் தப்பிச் சென்ற 4 பேரை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரை தலைமை இடமாகக் கொண்டு ஏபிஆர் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று தவணைக்கு பொருட்கள் கொடுப்பதும் பண்டு சீட்டு நடத்தி அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பரிசு பொருட்களை கொடுப்பதுமான நிறுவனத்தை நடத்தி வருகின்றது.
இந்த நிறுவனத்திற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன அந்த நிறுவனங்களில் தினசரி வசூல் ஆகின்ற பல லட்சம் ரூபாய்களை தினசரி இரவோடு இரவாக செய்யாறில் உள்ள தலைமை அலுவலகத்தில் அந்தந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கொண்டு வந்து சேர்த்து வருவது வாடிக்கையான விஷயம் ஆகும்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா புளியரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன் (வயது 31). இவர் வந்தவாசியில் கிளை உள்ள நிதி நிறுவனத்தில், மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
வந்தவாசி கிளைகளில் வசூல் ஆகும் பணத்தை தினசரி செய்யாறு தலைமையகத்துக்கு எடுத்துச் சென்று சேர்க்க வேண்டிய நபர் அன்று பணிக்கு வராத காரணத்தால், மணிமாறன் வசூலான ரூபாய் 16.55 லட்சம் ரொக்கத்தை தானே எடுத்துக் கொண்டு இரவு 8.30 மணிக்கு பைக்கில் வந்தவாசியில் இருந்து செய்யாருக்கு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.
வந்தவாசி- செய்யாறு சாலையில், புலிவாய் கூட்டுச்சாலை அருகே செல்லும்போது, 2 கார்களில் வந்த 7 பேர் மணிமாறனை வழிமறித்து காரில் கடத்தி சென்றனர். செய்யாறு வந்தவாசி சாலையில் மணிமாறனை கடத்தி அவர்கள் திண்டிவனம் வந்தவாசி சாலையில் தெள்ளார் வரை சென்று அங்கு ஒரு வயல்வெளியில் வைத்து மணிமாறனை தாக்கியுள்ளனர்.
பின்னர் மீண்டும் அவரை காரில் அழைத்துக் கொண்டு செல்லாரிலிருந்து சேத்துப்பட்டு வழியாக ஆரணி நோக்கி சென்றபோது ஆரணி சேத்துப்பட்டு சாலை பிரிவில் ஆரணி இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரவேலு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இதனை கண்ட மணிமாறன் என்னை காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டுள்ளார். சத்தத்தைக் கேட்ட போலீசார் துரத்திச் சென்று காரை மடக்கினர். அப்போது காரிலிருந்த 5 பேரில் 4 பேர் ரூ.6 லட்சத்து 17 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து காரில் இருந்த ஆரணி தாலுகா புங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (55) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் மணிமாறனையும், மீதி பணம் ரூ.10.38 லட்சத்தையும் போலீசார் மீட்டனர். மேலும் மற்றொரு காரில் வந்த 2 பேர் காருடன் தப்பிவிட்டனர்.
இதைத்தொடர்ந்து பிடிபட்ட ஆறுமுகம், மீட்கப்பட்ட மணிமாறன் மற்றும் பணத்தை வந்தவாசி தெற்கு போலீசாரிடம் ஆரணி போலீசார் ஒப்படைத்தனர். இந்த நிலையில் மற்றொரு காரில் தப்பிய இருவரும் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமம் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வந்தவாசி தெற்கு போலீசாரிடம் நேற்று அதிகாலை காருடன் பிடிபட்டனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் இருவரும் செய்யாறு தாலுகா ஜடேரி கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் தங்கவேலு (21), பெரும்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேட்டுவின் மகன் அஜித்குமார் (24) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மணிமாறன் அளித்த புகாரின் பேரில் தங்கவேலு, அஜித்குமார், ஆறுமுகம், ஆரணியை சேர்ந்த ராம்கி உள்ளிட்ட 7 பேர் மீது வந்தவாசி துணை சூப்பிரண்ட் கார்த்திக், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கவேலு, அஜித்குமார், ஆறுமுகம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும் மேற்படி நிதி நிறுவனத்திற்கு சொந்தமானது என நேற்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதனால் நிதி நிறுவன மேலாளர் மணிமாறன் மீது இப்போது போலீசாரின் சந்தேக பார்வை திரும்பியுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும் நிதி நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரிய வந்த பிறகு இந்த சந்தேகம் வலுவடைந்துள்ளது. எனவே இந்தக் கடத்தல் சம்பவத்தில் மேலும் சிலர் மூளையாக செயல்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மணிமாறன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்வதற்காக அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று தேடிய போது அந்த மோட்டார் சைக்கிள் காணவில்லை இது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu