/* */

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடைபயணம்

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு, விவசாயிகள் நடைப்பயணத்தை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

HIGHLIGHTS

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடைபயணம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

புனல்காடு பகுதியில் குப்பை கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது..

திருவண்ணாமலை அருகே புனல்காடு கிராமத்தில் நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை கொட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையை கைவிடக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் கடந்த 13-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தினமும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர்கள் 18 - வது நாளான நேற்று ஊர்வலமாக சென்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது. தடையை மீறி நடைபயணம் மேற்கொள்வோம் என போராட்டக் குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்தனர். அதன்படி, புனல்காடு கிராமத்தில் மக்கள் திரண்டனர்

இதையடுத்து, கூடுதல் எஸ்பி பழனி தலைமையில் புனல்காடு கிராமத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். நீண்ட தொலைவு நடைபயணம் செய்வதை அனுமதிக்க முடியாது, திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலில் இருந்து நடைபயணமாக சென்று ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர். காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம் தலைமையில் அண்ணா நுழைவு வாயில் அருகே 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திரண்டனர்.

அப்போது மாநிலத் தலைவர் பெ.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தி, நடைபயணம் மேற்கொள்ளும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். இதில் உடன்பாடு எட்டப்படாததால், நடைபயணம் செல்வதற்கு அனுமதிக்க முடியாது, கைது செய்ய நேரிடும் என காவல் துறையினர் எச்சரித்தனர்.

ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைதடுப்புகளை தூக்கி வீசி அவர்கள் ஆட்சியர்ர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். பொதுமக்கள் அனைவரும் போளூர் சாலையில் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காக, ஆட்சியர் அலுவலக பகுதியில் ஏரி அருகே சாலையின் குறுக்காக போலீஸ் வேன்களை நிறுத்தி போலீசார் தயாராக இருந்தனர். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தை ஊர்வலம் நெருங்கியது. போலீசாரை பார்த்ததும், தாங்கள் தடுத்து நிறுத்தப்படுவோம் என்று நினைத்து அறிவியல் பூங்கா முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை சுற்றி போலீசார் அரண்போல் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெரும்பாலும் பெண்கள் தான் அதிகமாக குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட அவா்கள் குப்பை கொட்டக்கூடாது என்று கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக சாலைமறியலில் ஈடுபட்ட அவர்கள் திடீரென முன்னேறி செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் அந்த பகுதியில் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு நிலைமையை போலீசாரால் கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை.

பெண்கள் பலர் தனித்தனியாக பிரிந்து குடியிருப்பு பகுதி வழியாகவும், அருகில் உள்ள ஏரி கால்வாய் வழியாகவும் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர். ஒருகட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் திகைத்தனர். அவர்களை வலுகட்டாயமாக பிடித்து காவல்துறை வாகனத்தில் ஏற்றுவதில், காவல்துறையினர் தீவிரம் காட்டினர். அப்போது பெண்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் குழந்தைகள், வயதான பெண்கள் பலர் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். பல பெண்களின் அழுகையும், குழந்தைகளின் கூக்குரலும் என அந்த பகுதி போர்க்களம் போன்று காட்சியளித்தது.

இந்த நிலையில் ஆட்சியர் பா.முருகேஷை, அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பெ.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் பெ.சண்முகம் கூறும்போது பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவு அடிப்படையில் அடுத்தக்கட்ட போராட்டத்தை தீர்மானிப்போம். என்றார். அதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Updated On: 30 May 2023 12:58 AM GMT

Related News