பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக மீண்டும் அமல்படுத்த கோரிக்கை

திருவண்ணாமலை அருகே தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் 24-வது சங்க அமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை அருகே பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
பங்களிப்பு ஓய்வூதியம் எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டம் தற்போது அரசு ஊழியர்களிடம் அமலில் உள்ளது. இதனை ரத்து செய்து, தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட படி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரி அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை வேங்கிக்காலில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் 24-வது சங்க அமைப்பு தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் தியாகராஜன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் சாது, தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவல்துறை நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் மூா்த்தி வரவேற்றாா்.
சங்கத்தின் மாநிலச் செயலா் முத்துராமலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலா் (பணி நிறைவு) இளங்கோவன், டாக்டா் கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைவா் மாதவ.சின்ராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
கூட்டத்தில், கொரோனாவை காரணம் காட்டி முடக்கப்பட்ட 21 மாதங்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு அகவிலைப்படி நிலுவைத் தொகையை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்.
மத்திய அரசு வழங்கிய பின்னரும் மாநில அரசு வழங்க வேண்டிய 2 தவணை பஞ்சப்படியையும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா்கள் ஆல்பா்ட், ரங்கநாதன், நரசிம்மன், அண்ணாமலை, இணைச் செயலா்கள் பழனி, பலராமன் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu