அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
![அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்](https://www.nativenews.in/h-upload/2024/02/12/1861803-download-35.webp)
அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான, புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக உள்ளது. நினைத்தாலே முக்தியை தரக் கூடிய முக்தித் தலம் என்பதாலும், சிவனே மலையாக அமர்ந்திருப்பதாக கருதப்படுவதால் மலையை வலம் வந்து வணங்கினால் பாவங்கள் நீங்கி, அனைத்து விதமான செல்வ வளங்களும் கிடைக்கும் என்பதாலும் தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். 14 கி.மீ., சுற்றளவு தூரம் கொண்ட அண்ணாமலை கிரிவல பாதையில் சித்தர் ஜீவ சமாதிகள், ஆசிரமங்கள், குளங்கள் உள்ளிட்ட பலவும் உள்ளன.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் சிவனின் அக்னி ஸ்தலமான அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா், வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தா்கள் வந்து, செல்கின்றனா்.
திருவண்ணாமலையில் அனைத்து நாட்களிலும் கிரிவலம் வரலாம் என்பதால் வருடத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இருந்தாலும் தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் பொது தரிசன வரிசை கட்டண தரிசன வரிசைகளில் கூட்டம் அலைமோதியது.
அதன்படி, நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர், அதிகாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாலையில் இருந்தே பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. சுமார் 3 மணி நேரம் வரை தரிசன வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள் அதிக அளவில் கோயிலில் தரிசனம் செய்தனர். அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு முன்னுரிமை தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் காத்திருக்கும் நேரம் தற்போது குறைந்திருக்கிறது.
மேலும், அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு, நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தின் கீழ், நேற்று லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu