விவசாயிகளை அலைக்கழிக்கும் வங்கிகள்: குறை தீர் கூட்டத்தில் புகார்
![விவசாயிகளை அலைக்கழிக்கும் வங்கிகள்: குறை தீர் கூட்டத்தில் புகார் விவசாயிகளை அலைக்கழிக்கும் வங்கிகள்: குறை தீர் கூட்டத்தில் புகார்](https://www.nativenews.in/h-upload/2023/03/18/1681899-coll-vivasai-meet.webp)
கலெக்டர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-
பிரதம மந்திரி கிஷான் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களுக்கும் நிதிப்பயன் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ரக நெல் விதைகள் மற்றும் வேளாண் கிடங்குகளில் தரமான விதை நெல் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
பயிர் காப்பீடு திட்டத்தில் ஒரு கிராமமே பாதிக்கபட்டால் தான் விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்கும் என்ற நிலை உள்ளது. ஒரு விவசாயியின் பயிர் பாதிக்கப்பட்டாலும் அந்த விவசாயிக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் முடிவுறா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கிராமங்களில் சாலைகள் அமைக்கும் போது நீர்வரத்துக் கால்வாய்களுக்கு பாதிப்பின்றி இருக்க வழிவகை செய்ய வேண்டும்
திருவண்ணாமலை மாவட்டம் நெல் சாகுபடியில் சிறந்து விளங்குகின்றது. ஆனால் விவசாயிக்கு நெல் அறுவடை எந்திரம் கிடைப்பதில்லை. கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதில்லை. அதேபோல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயிகளை அலைகழித்தாலும் கடன் வழங்குவதில்லை. மும்முனை மின்சாரம் வழங்கும் போது குறைந்தழுத்த மின்சாரம் வழங்குவதால் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிரமம் ஏற்படுகிறது.
மேல்வணக்கம்பாடி பால் கொள்முதல் நிலையத்தில் பால் பகுப்பாய்வு கருவி வழங்க வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
இதையடுத்து விவசாய சங்க பிரதிநிதிகளின் மூலம் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் தனிநபர் தொடர்பான மனுக்கள் மீதும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் ஹரக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu