அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.12 கோடி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.3.12 கோடி ரொக்கம், காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஒரு மாதத்தில் ரூ.3.12 கோடி ரொக்கம், 340 கிராம் தங்கம், 1,895 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனர்.
காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 7-வது நாளான நவம்பர் 23ஆம் தேதி அன்று மகா தேரோட்டம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 26 ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.
அன்றைய தினம் சுமாா் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கிரிவலம் வந்து, சென்றனா்.
தொடர்ந்து 11 நாட்கள் தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வந்தது. மலை உச்சியில் காட்சி தரும் மகா தீபம் நேற்று முன்தினம் 6-ம் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து நேற்று காலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
தீபக் கொப்பரையை எடுத்து வரும் வழியிலும் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் கொப்பரையை வழிபட்டனர்.
கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் கோயில் ஊழியர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.
தொடர்ந்து வருகிற 27-ந் தேதி கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது மகா தீப மை (தீப சுடர் பிரசாதம்) சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன் பின்னர் மகா தீப மை அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது.
உண்டியல் காணிக்கை
இந்த நிலையில், கோயில் இணை ஆணையா் ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் ஜீவானந்தம், அறங்காவலா்கள் மீனாட்சி சுந்தரம், ராஜாராம், கோமதி குணசேகரன், பெருமாள் ஆகியோா் மேற்பாா்வையில்
100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், பக்தா்கள் நேற்று வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதில் கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் ரூபாய் 3.12 கோடியை பணமாக செலுத்தியுள்ளனர். மேலும் 340 கிராம் தங்கம், 1,895 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.