படவேடு மாடு விடும் விழா: சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்
![படவேடு மாடு விடும் விழா: சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் படவேடு மாடு விடும் விழா: சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்](https://www.nativenews.in/h-upload/2023/03/06/1674032-download-61.webp)
மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
கலசப்பாக்கம் தாலுக்கா செய்திகள்:
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு பெருமாள்பேட்டை கிராமத்தில் காளியம்மன் கோவில் மாசி பெளர்ணமி திருவிழா முன்னிட்டு காளைவிடும் விழா நடைபெற்றது.
விழாவில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்துகொண்டு வாடிவாசல் வழியாக காளை விடும் விழாவை தொடங்கி வைத்தார். படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், படவேடு ரேணுகாம்பாள் கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, காலையில் கிராம தேவதை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அப்போது, கிராம பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர், பேண்டு வாத்தியங்கள், வானவேடிக்கைகள் முழங்க பரிசு பொருட்களுடன் இளைஞர்கள் வாடிவாசலை வந்தடைந்தனர். தொடர்ந்து, வீதியில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து 200 காளைகள் கலந்துகொண்டன. முடிவில் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் ஓடிய காளைகளுக்கு முதல் பரிசாக 150 சிசி பைக், 2ம் பரிசாக 100 சிசி பைக், 3ம் பரிசாக மொபெட் உள்ளிட்ட 55 பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகள் முட்டியதில் வேடிக்கை பார்க்க வந்த 25 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காளை விடும் விழாவை முன்னிட்டு ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மேற்பார்வையில், கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
கலசபாக்கம் செய்யாற்றில் கோவில் புதைந்திருப்பதாக தகவல்
மாசி மகத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடத்துவதற்காக கலசபாக்கம் செய்யாற்றில் பொக்லைன் எந்திரம் மூலம் சமன் செய்தபோது மண்ணில் பழமையான கோவில் புதைந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து இன்று தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் எலத்தூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிமகம் திருவிழா நடத்துவதற்காக பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வந்தது.
இதனையொட்டி அருகில் தீர்த்தவாரி நடைபெறும் செய்யாற்றில் பொக்லைன் எந்திரம் கொண்டு சமன் செய்யப்பட்டது. அப்போது அங்கு மண்ணில் பெரிய பெரிய கற்கள் சிக்கி உள்ளன. அதன்பிறகு சிறிது தூரத்தில் பக்கவாட்டில் தோண்டிய போது பழமையான செங்கல் சுவர் இருப்பது தெரியவந்தது. உடனடியாக பொக்லைன் எந்திரத்தை நிறுத்தப்பட்டது.
அந்த இடத்தில் பழமை வாய்ந்த கோவில் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்பட்டதால் அதுகுறித்து வருவாய்த்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்ய உள்ளதாகவும், அதன்பிறகே அந்த இடத்தை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் கிராமத்து பொது மக்களிடையே ஒரு பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu