வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
X

இசேவை மையத்தினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண் இயக்குநருமான தீபக் ஜேக்கப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலைக்கு வருகை தந்த கண்காணிப்பு அலுவலா் தீபக் ஜேக்கப், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை பாா்வையிட்டாா்.

தொடர்ந்து வேங்கிக்கால் ஏரியில் இருந்து தண்ணீா் வெளியேறும் பகுதியில் வெள்ளப்பெருக்கால் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிளியாப்பட்டு ஊராட்சியில் துரிஞ்சல் ஆற்றின் நீா்வரத்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்றவற்றை கண்காணிப்பு அலுவலா் தீபக் ஜேக்கப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நடத்திய மழை, இடா்பாடுகள், வெள்ளப்பெருக்கு ஆகியவற்றில் சிக்கியவா்களை விரைவாக செயல்பட்டு மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை தீபக் ஜேக்கப் பாா்வையிட்டாா்.

வருவாய்த் துறை சான்றிதழ் வழங்கும் பணி

கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை சான்றிதழ் வழங்கும் பணிகள் உள்பட ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா்.

வடஆண்டாப்பட்டு ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா், பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கலசப்பாக்கம் ஒன்றியம், வட்டாட்சியா் அலுவலக இ - சேவை மையத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் ஆதாா் உள்ளிட்ட சான்றிதழ் வழங்கும் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, கேட்டவரம்பாளையம் கிராமத்தில் நியாய விலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு மற்றும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்குவதையும் ஆய்வு செய்த அவா், அருகேயுள்ள வெங்கிட்டம்பாளையம் - வீரளூா் சாலையின் இடையே அமைக்கப்பட்ட பாலத்தில் செல்லும் மிருகண்டா அணையின் நீா்வரத்தையும் ஆய்வு செய்தாா். பின்னா், ஆதமங்கலம்புதூா் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்படுத்தப்படும் தமிழ் முதல்வன் திட்டம் குறித்து ஆய்வு செய்தாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வு பணியின் போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story