அரசு குடியிருப்பில் பேய் நடமாட்டம்: பீதியில் குடியேற மறுக்கும் அதிகாரிகள்

கலசப்பாக்கம் வட்டாட்சியர் குடியிருப்பு.
திருவண்ணாமலையில் அரசு குடியிருப்பில் 11 ஆண்டுகளாக பேய் நடமாட்டம் இருப்பதாக கூறி அதிகாரிகள் குடியேற மறுத்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என இருட்டை பார்த்து பயப்படுவர்களும் இன்றளவும் இருந்து வருகின்றனர். பேய்கள் பற்றிய பயம் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. பேய் இருக்கா இல்லையா என்ற விவாதம் நீடித்து வருகிறது. தெய்வ சக்தி என்று ஒன்று இருக்கும் போது தீய சக்தியும் உள்ளது என ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.
அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பேய் ஓட்டுவது பேய்களை கட்டுப்படுத்துவது என சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது. சாலைகளில் பேய் நடமாட்டம், சுடுகாட்டு பகுதியில் பிசாசு நடமாடுகிறது என பல இடங்களில் பேய்களை கண்டதாகவும் கூறுகின்றனர்.
பேய்க்கு பயந்து வீடுகளை காலி செய்யும் நிலைமை உள்ளது. வாடகை வீடுகளுக்கு செல்பவர்கள் இந்த வீட்டில் யாராவது தற்கொலை செய்திருக்கிறார்களா இளம் வயதினில் யாராவது இறந்தார்களா என கேள்வியை முன்வைத்த பிறகு வாடகை வீட்டில் குடியேறுகின்றனர். அந்த அளவுக்கு பேய் பயம் மனிதனை ஆட்கொண்டுள்ளது. இதனால் வீடுகளின் முகப்புகளில் வேப்பிலை கட்டுவது வாசலுக்கு அருகில் செருப்பு, துடைப்பம் போட்டு வைக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் பேய் இருப்பதாக கூறி, அரசு குடியிருப்பில் அதிகாரிகள் தங்காமல் புறக்கணித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை தலைமை இடமாகக் கொண்டு தனி தாலுகா கடந்த 2012-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. நவீன வசதிகளுடன் சந்தைமேடு பகுதியில் செய்யாற்றின் கரையோரம் புதிதாக அலுவலகம், தாசில்தார் குடியிருப்பு கட்டப்பட்டது.
கடந்த 11 ஆண்டுகளில் தற்போது வரை 14 தாசில்தார்கள் பணியாற்றியுள்ளனர். இது வரை பணியாற்றி எந்தவொரு தாசில்தாரும் குடியிருப்பில் வசிக்கவில்லை.
இதற்கு காரணம் அந்த குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் அமானுஷ்ய உருவங்கள், பேய்கள் நடமாடுவதாக வதந்தி பரவியது.
இதனால் இந்த குடியிருப்பில் எந்த ஒரு அதிகாரியும் இதுவரை குடும்பத்துடன் குடியேறவில்லை என கூறுகின்றனர்.
பகல் நேரங்களில் மட்டும் ஒரு சில அரசு விழா காலங்களில் மட்டுமே உணவு சாப்பிடுவதற்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பாம்புகளும் நடமாடுகின்றன. இதனால் அந்த குடியிருப்பில் எந்த அதிகாரியும் இதுவரை குடும்பத்துடன் குடியேறவில்லை என கூறுகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த கட்டிடம் கட்டி 11 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் எந்த அதிகாரியும் குடும்பத்துடன் தங்கவில்லை. ஒரு சில தாசில்தார் மட்டும் பகலில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு சென்று விடுவார். அதன் பின்னர் யாரும் வருவதில்லை. அதிகாரிகளுக்கு பணி சுமை அதிகரித்து இரவு நீண்ட நேரம் ஆனாலும் யாரும் இங்கு தப்பி தவறி கூட தங்குவதில்லை. எவ்வளவு நேரம் ஆனாலும் அவரவர் வீட்டுக்கு சென்று விடுகின்றனர். குடியிருப்புக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது. இதனால் பேய் பீதியில் இரவு நேரங்களில் இங்கு நாங்கள் யாரும் செல்வதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
லட்சக்கணக்கான ரூபாய் செலவிட்டு மக்கள் பணியை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் பணியிடத்திலேயே அதிகாரிகள் தங்குவதற்கு குடியிருப்பை அரசு ஏற்படுத்தி உள்ளது. ஆனால் 11 ஆண்டுகள் ஆகி 14 தாசில்தார்கள் இங்கு வந்தும் ஒருவரும் தங்காதது வேதனையை ஏற்படுத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே இனி வரும் காலங்களில் இந்த நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu