ஜமுனாமரத்தூர் அருகே விவசாயி இறந்த வழக்கில் வன ஊழியர் உட்பட 3 பேர் கைது

ஜமுனாமரத்தூர் அருகே விவசாயி இறந்த வழக்கில் வன ஊழியர் உட்பட 3 பேர் கைது

பைல் படம்

ஜமுனாமரத்தூரில் இளைஞரை அடித்துக் கொலை செய்த வழக்கில் வன ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் கீழ்கனவாயூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (28), விவசாயி. திருமணமான இவர் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

கடந்த 11-ந் தேதி இவர் வேடகொல்லைமேடு அமிர்தி சாலையோரம் இறந்து கிடந்தார். இது குறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கழுத்து இறுக்கியும், தாக்கியும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்த ராமதாஸின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், செம்மரம் கடத்தல் எதிரொலியாக ஏற்பட்ட மோதலில் ராமதாஸ் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக, கோமுட்டேரி கிராமத்தில் வசிக்கும் வன ஊழியர் ராஜாராம் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், கடத்தி வரப்படும் செம்மரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு இடம் அமைத்து கொடுக்க மறுத்த ராமதாசை அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.

கீழ்கனவாயூர் கிராமத்திற்கு பஸ்சில் வந்து இறங்கிய ராஜாராமை அவர்கள் காரில் கடத்தி சென்று அடித்து கொலை செய்து விட்டு பிணத்தை மீண்டும் காரில் கொண்டு வந்து வேடகொல்லைமேடு சாலையோரம் வீசிவிட்டு சென்று உள்ளனர். இதையடுத்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய வனவர் ராஜாராம், அவரது நண்பர்கள் குகன், கிருபாகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags

Next Story