குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக  உயிரிழப்பு

கலசப்பாக்கம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் (பைல் படம்)

கலசப்பாக்கம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா குலால்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 36), மேஸ்திரி. இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் ஏற்கனவே உள்ள நிலையில் சங்கீதா மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

இதையடுத்து அவர் பிரசவத்திற்காக கலசப்பாக்கத்தை அடுத்த நார்த்தாம்பூண்டி கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார். அவருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் கார்த்திகேயனின் 2-வது மகன் கோபிநாத் (வயது 2) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் திடீரென கோபிநாத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது தந்தை கார்த்திகேயன் மற்றும் உறவினர்கள் அந்த பகுதியில் தேடினர். அப்போது குளத்தில் கோபிநாத் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே சிறுவனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கலசப்பாக்கம் போலீசில், குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story