ஆரணியில் புதிய கருவூல கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்

ஆரணியில் புதிய கருவூல கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்

பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் வேலு

ஆரணியில் புதிய கருவூல கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

ஆரணிக்கு தான் தாயாக இருந்து திட்டங்களை நிறைவேற்றி வருவதாக புதிய சார் நிலை கருவூல கட்டிடத்தினை திறந்து வைத்து அமைச்சர் எ.வ.வேலு பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் புதிய சார் நிலை கருவூல கட்டிடம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார் . துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி,நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு ஆரணி கோட்டை மைதானம் எதிரில் 1 கோடியே 26 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சார் நிலை கருவூல கட்டிடத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த சமூக வளைகாப்பு, மகளிர் உரிமை தொகை, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் உதவித் தொகை, தமிழ்ப் புதல்வன் திட்டம், மகளிர் இலவச பேருந்து வசதி உள்ளிட்ட அரங்கிற்கு சென்று பார்வையிட்டார். இதனை அடுத்து நகராட்சி சார்பில் புதிய குப்பை அள்ளும் வாகனங்களை கொடியசைத்து வைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

அப்போது விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

ஆரணிக்கு தான் தாயாக இருந்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன். மேலும் தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களிலே தன் நெஞ்சுக்கு அருகாமையில் உள்ள திட்டம் காலை உணவு திட்டம் ஆகும். சர்.பிடி தியாகராஜன், காமராஜர் ஆகியோர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தனர். ஆனால் முன்னாள் முதல்வர் கலைஞர் அதுனுடன் முட்டையை வழங்கி சத்துணவு திட்டமாக மாற்றினார் . மேலும் தற்போது நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை வழங்கியுள்ளார். இதை பின்பற்றியே கனடா நாடும் தங்கள் நாட்டில் காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

ஆரணியில் 5,785 பயனாளிகளுக்கு ரூ.13.28 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அரசு பள்ளிக் கட்டடங்கள், பால் கொல்முதல் நிலைய கட்டடம், நியாயவிலைக் கடைகள் என சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

திமுக ஆட்சியைப் பொருத்தவரை எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான். ஆகையால்தான், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வெற்றி பெறவிட்டாலும், தொகுதி மக்களுக்கு ரூ.1.80 கோடியில் அறிவுசாா் மையம் திறக்கப்பட்டது.

ரூ.5 கோடியில் அரசு மருத்துவமனை கட்டடம், ரூ.8 கோடியில் சிமென்ட் சாலை, ரூ.16 கோடியில் கமண்டல நாக நதியில் பாலம் அமைக்கப்படுகிறது.

மேலும், ரூ. 1.50 கோடியில் பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடம், மகளிா் பள்ளியில் புதிய கட்டடம், 2 சிறுவா் பூங்கா உள்ளிட்ட ஏராளமான திட்டப் பணிகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் இது போன்ற அரசு நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்களை சாலையில் வெறும் காலுடன் நிற்க வைப்பது வருத்த மளிப்பதாகவும் பள்ளி மாணவர்களை இது போன்ற சம்பவத்திற்கு மாணவர்களை உட்படுத்த கூடாது என்று கண்டித்து பேசினார்.

இதனை தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் மாற்று திறனாளிகளுக்கு இரு சக்கர நாற்காலி மகளீருக்கு இலவச தையல் இயந்திரம் இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் எம். எல்.ஏ.க்கள் கிரி, ஜோதி , மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், நகர மன்ற தலைவர் மணி, தொழிலாளர் திறன் மேம்பாட்டு வாரிய உறுப்பினர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர் துரைமாமது, மோகன் ,மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் ,நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டன ர்.

இறுதியில் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

முன்னதாக ஆரணியில் புதிய கட்டிடம் திறப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை புரிந்த பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு செண்ட மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags

Next Story