ஆரணி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: உயிர் தப்பிய மாணவர்கள்

ஆரணி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: உயிர் தப்பிய மாணவர்கள்

சேற்றுக்குள் கவிழ்ந்த பள்ளி வேன்.

ஆரணி அருகே பள்ளி வேன் கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சிறுமூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது.

இந்த உயர்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார பகுதியில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு மாணவர்கள் வந்து செல்வதற்கு முறையான பேருந்து வசதி கிடையாது. இதனால் மாணவர்கள் தினந்தோறும் நடந்துதான் பள்ளிக்கு வர வேண்டும்.

இதனால் பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்கு அரசு பள்ளி சார்பில் வாகன வசதி ஏற்படுத்தி பள்ளி நேரங்களில் மட்டும் மாணவர்களை அழைத்து வருவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வர அரசு பள்ளி வேன் சிறுமூர் அருகே வடக்கு கொட்டாமேடு பகுதியில் இருந்து பள்ளிக்கு 10 மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு அதே கிராமத்தை சேர்ந்த ஜெய் கணேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட ஓட்டுநர் ஜெய்கணேஷ் சாலையில் ஓரத்தில் இருக்கும் மண் தரையில் வேனை இறக்க முயன்றுள்ளார்.

நேற்று பெய்த கன மழையால் சாலையின் ஓரத்தில் இருந்த மண் தரையில் இருந்த சேற்றில் வேன் டயர் சிக்கியது. வேனை இயக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக வேன் சேற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த ஓட்டுனர் உட்பட 10 மாணவ மாணவிகள் காயம் இன்றி உயிர் தப்பினர்.

இதனை கவனித்த கிராம பொதுமக்கள் உடனடியாக ஓடி வந்து மாணவர்களை மீட்டனர் . இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story