பள்ளி திறந்த முதல் நாளே அதிர்ச்சி :பள்ளி வாகனத்தில் திடீர் தீ விபத்து ..!

பள்ளி திறந்த முதல் நாளே அதிர்ச்சி :பள்ளி வாகனத்தில் திடீர் தீ விபத்து ..!

எரிந்த நிலையில் பள்ளி வாகனம்

மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளிப் பேருந்தில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில், மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளிப் பேருந்தில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று நடுரோட்டில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென தீ பிடித்து எரிய துவங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் கிராமத்தில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த தனியார் பள்ளியில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர பள்ளி நிர்வாகம் பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு பள்ளி நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது.


அப்போது பள்ளி வாகனத்தில் 13 மாணவர்கள் இருந்தனர்.

பள்ளி பேருந்து 13 மாணவர்களுடன் பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. நடுக்குப்பம் கிராமம் அருகே பேருந்து சென்றுக் கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் முன்புறம் புகை வருவதைக் கண்ட ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே பேருந்தை நிறுத்தினார்.

உடனடியாக பேருந்து டிரைவர் மாணவர்களை கீழே இறங்குமாறு கூறி, மாணவர்களை வாகனத்தில் இருந்து பத்திரமாக கீழே இறக்கி விடப்பட்டனர்.

பள்ளி வாகனத்தில் புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலறிந்து வந்த ஆரணி தீயணைப்பு துறை அலுவலர் பூபாலன் (பொறுப்பு) தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளி பேருந்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

விபத்துக்குள்ளான பேருந்தில் மாணவர்கள் குறைந்த அளவிலேயே இருந்ததாலும், ஓட்டுநரின் சமயோசிததத்தாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. பள்ளி துவங்கப்பட்ட முதல் நாளிலேயே பள்ளிப் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story