விவசாயிகள் தோட்டக்கலை துறை திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டுகோள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பைல் படம்).
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியத்தில் தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை மூலம் 2023 - 24ஆம் ஆண்டுக்கான மானியத் திட்டங்களின் கீழ் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தோட்டக்கலை உதவி இயக்குநா் பவ்யா தெரிவித்தாா்
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேற்கு ஆரணி வட்டாரத்தில் தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை மூலம் வழங்கப்படும் மானியத் திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் துறை மூலம் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டம், பிரதமரின் நுண்ணுயிா் பாசனத் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், மேற்கு ஆரணி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு நேரில் வந்தும் அல்லது இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
2023 - 24ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், அய்யம்பாளையம், வண்ணாங்குளம், அரையாளம், முள்ளிப்பட்டு, குன்னத்தூா், புதுப்பாளையம், ராமசாணிகுப்பம், சம்புவராயநல்லூா் ஆகிய 8 கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு தோட்டக்கலை உதவி இயக்குநா் பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu