மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு தொடர்பாக 2 ஊழியர் பணியிடை நீக்கம்

மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு  தொடர்பாக  2 ஊழியர் பணியிடை நீக்கம்
ஆரணி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு தொடர்பாக 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சோமதாங்கல் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் ராஜ்கமல் வயது (23). இவர் ஓண்ணுபுரம் மின்வாரிய துறையில் கடந்த 3 ஆண்டுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு ராஜ்கமல் பணிபுரிந்து வந்த மின்நிலையத்திலேயே மின்வாரிய கேங்மேனாக பணி நியமனம் செய்யப்பட்டார். மேலும் ஆரணி சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பொழிந்து வந்துள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருந்துள்ள மின்கம்பிகள் அறுந்து விழுந்தும் மற்றும் மின்கம்பங்களும் சேதமடைந்தன.

அதனைத்தொடர்ந்து ஓண்ணுபுரம் மின்வாரிய துறையினர் மழையினால் சேதமடைந்த கம்பிகள் மற்றும் கம்பங்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 7ஆம் தேதி ஆரணி அருகே உள்ள அத்திமலைபட்டு கிராமத்தின் ஆரணி வேலூர் சாலையில் மின்வாரிய தொழிலாளர்களுடன் மின்வாரிய தொழிலாளர் ராஜ்கமலும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ராஜ்கமல் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அதன் பின்னர் ராஜ்கமல் உடன் பணியாற்றிய சக மின்வாரிய தொழிலாளர்கள் ராஜ்கமலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமணைக்கு செல்லும் வழியிலேயே ராஜ்கமல் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து ராஜ்கமலின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ராஜ்கமலின் வீட்டிற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவம் அறிந்த ராஜ்கமலின் தாயார் லோகம்மாள் அதிர்ச்சி அடைந்து வீட்டிலேயே மயக்கம் அடைந்தார். அதன் பிறகு லோகம்மாளை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ராஜ்கமலின் மரணத்தில் சந்தேகம் உள்ளது எனக்கூறி உடலை வாங்காமல் இருந்தார்.

இச்சம்பவம் குறித்து ராஜ்கமலின் தாயார் லோகம்மாள் கண்ணமங்கலம் போலீசில் மின்நிலைய அதிகாரிகளின் அலட்சியத்தால் என்னுடைய மகன் உயிரிழந்துள்ளார், அதுமட்டுமல்லாமல் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கண்ணமங்கலம் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று ஓண்ணுபுரம் மின் பாதை ஆய்வாளர் துளசி, கம்பியாளர் குமரேசன் ஆகிய 2 நபர்களை தற்காலிக பணியிட நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags

Next Story