நகைக்கடன் தள்ளுபடி செய்யாததால் வங்கி முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்யாததால் தீக்குளிக்க முயன்ற பெண்.
கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி தற்போது கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அந்தப்பகுதி பொதுமக்கள் நகைக்கடன் பெற்றுள்ளனர். அவர்களில் பலருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. புதுப்பேட்டை, கண்ணமங்கலம், அழகுசேனை பகுதிகளை சேர்ந்த சுதா, தனலட்சுமி, அமுதா, கதிரேசன், பவித்ரா, சசிகலா ஆகியோர் கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்றனர். அங்கு வங்கி செயலாளர் குருநாதனிடம் நாங்கள் 5 பவுன்தான் அடகு வைத்து கடன் பெற்றுள்ளோம். எங்களுக்கு ஏன் நகைக்கடன் தள்ளுபடி ஆகவில்லை என கேட்டு தகராறு செய்துள்ளனர்.
அதற்கு இது அரசு எடுத்த முடிவு. வேறு மாவட்டத்தில் இருந்து கூட்டுறவு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து முடிவு செய்தது. நாங்கள் ஏதும் செய்ய முடியாது எனக்கூறி அனுப்பினார். அப்போது வெளியே வந்த சசிகலா என்பவர் தான் கேனில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். உடனே வங்கி செயலாளர் குருநாதன், கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா மற்றும் போலீசார் சென்று மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu