/* */

தொடர் மழையால் வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

இரண்டு தினங்களுக்கு முன் பெய்த 120 மி.மீ. மழையால் வேகமாக நீர்நிலைகள் நிரம்புவது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

HIGHLIGHTS

தொடர் மழையால் வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி
X

தாமரைக்குளம் - கோப்புப்படம் 

குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்த அவிநாசி, மழைமறைவு பகுதியாகவே உள்ளது. வட கிழக்குப்பருவ மழை கை கொடுப்பதால், அவிநாசி வட்டாரத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்ப துவங்கியுள்ளன.

ஆண்டு சராசரி மழையளவு வெறும், 600 மி.மீ மட்டுமே என்ற நிலையில் பருவமழை தான் பிரதான நீராதாரமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில் வட கிழக்குப்பருவ மழை கை கொடுக்க துவங்கியிருக்கிறது.

அவிநாசி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டைகள் நிரம்ப துவங்கியுள்ளன. குறிப்பாக இரண்டு நாட்களுக்கு முன் 120 மி.மீ., மழை பெய்தது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மழையால் அசநல்லிபாளையம் குளம், தாமரைக்குளம், கருவலூர் குளம் மற்றும் வெள்ளியம்பாளையத்தில் உள்ள நல்லாறு செக்டேம் ஆகியவை வேகமாக நிரம்புகின்றன. அதேபோல் பிற ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளும் மழைக்கு நிரம்ப துவங்கியுள்ளன. இன்னும் ஓரிரு நாட்கள் இதே போன்று மழை பெய்யும் பட்சத்தில் குளம், குட்டைகள் நிரம்பி நீர் வளம் பெருகும் என விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் குளம் குட்டைகளில் இருந்து, விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதன் அடிப்படையில் பல குளம், குட்டைகளில் இருந்து மண் எடுக்கப்பட்டது. வெட்டுக்குழிகள் ஏற்படாத வகையில் மேல் மண் மட்டுமே அள்ள வேண்டும். அப்போது தான் குளம், குட்டைகள் அதன் தன்மையை இழக்காமல் இருக்கும் என்ற நிலையில் ஆழமாக அடிமண் வரை தோண்டி எடுக்கப்பட்டதால் பல இடங்களில் உள்ள குளம், குட்டைகளில் வெட்டுக்குழிகள் ஏற்பட்டு அதில் தண்ணீர் நிரம்பியுள்ளது. தப்பித்தவறி அதில் இறங்கினால் சேற்றில் சிக்கும் வாய்ப்புக்கூட உள்ளது.

நீர் தேங்கியிருக்கும் குளம், குட்டைகள் அருகே, குழந்தைகள் சென்று விளையாடாத வகையிலான விழிப்புணர்வை, பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என தீயணைப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

அவிநாசியில் 103 ஏக்கர் பரப்பளவு உடைய தாமரைக்குளம், சுற்றுவட்டார கிராமங்களில் நஞ்சை விவசாய பூமிகளுக்கு பாசன நீர் ஆதாரமாக விளங்குகிறது. கடந்த 2 நாள் முன் பெய்த மழையால் தண்ணீர் அதிகரித்து வர துவங்கியது. சாலையப்பாளையத்தில் உள்ள குட்டை நிரம்பி மதகு வழியாக உபரி நீர் தாமரைக்குளத்திற்கு வந்த வண்ணம் உள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் அரிய வகை வனவிலங்குகள் அதிகளவு உள்ளன. வனத்திலுள்ள சிறு ஓடைகளில் மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் வரத்து இருக்கும். வனத்தில் போதிய மழை இல்லாத போது, தண்ணீர் தேவைக்காக, வன எல்லையிலுள்ள விளைநிலங்களுக்கு விலங்குகள் இடம் பெயர்ந்து பயிர்களையும் சேதப்படுத்தும்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண வனத்துறை சார்பில் இரு வனச்சரகங்களிலும், விலங்குகளின் குடிநீர் தேவைக்காக காட்டாறுகள், ஓடைகளின் குறுக்கே 50க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதே போல் 40 குடிநீர் தொட்டிகளும் உள்ளன.

இதில் இரு வனச்சரகங்களிலும் தலா 5 தொட்டிகளுக்கு, போர்வெல் மற்றும் சோலார் மின் மோட்டார் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக தண்ணீர் தேவைக்காக தாவர உண்ணிகள், மூணாறு ரோட்டை கடந்து அமராவதி அணைக்கு வந்து செல்லும்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையானது மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக பெய்து வருகிறது. இதனால் வனத்திலுள்ள தடுப்பணைகள், தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வருகிறது. இதனால் விளைநிலங்களுக்கு வனவிலங்குகள் இடம் பெயர்வது வெகுவாக குறைந்துள்ளது. வனமும் பசுமைக்கு திரும்பி வருவதால் தாவர உண்ணிகள் அதிக தூரம் இடம் பெயராது என விவசாயிகளும் நிம்மதியடைந்துள்ளனர்.

Updated On: 13 Nov 2023 3:43 PM GMT

Related News