வனப்பகுதியில் அனுமதியின்றி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் பறிமுதல்
ஆம்பூர் வன சரகத்திற்கு வனப்பகுதியில் அனுமதியின்றி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது
HIGHLIGHTS
ஆம்பூர் வன சரகத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டு ஊராட்சி காப்பு காட்டில் அதிகளவில் வனவிலங்குகள் உள்ளன. காப்புகாட்டையொட்டி வாணியம்பாடியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு செல்ல காப்புக்காட்டில் ஜோலார்பேட்டை அடுத்த இடையம் பட்டியை சேர்ந்த பொக்லைன் இயந்திரத்தை வைத்து ஒருவர் சாலை அமைக்க மண் நிறுவும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் வன சரகர் (பொறுப்பு) இளங்கோவன் மற்றும் வனத்துறையினர் உடனே அங்கு விரைந்து சென்றனர். அப்போது சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்த தப்பி ஓடினார்.
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் சதீஷ் கிடியோ உத்தரவின் பேரில் வனத்துறையினர் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து ஆம்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும் பொக்லைன் டிரைவர் சீனிவாசனை பிடித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.