திருச்சி ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த வடமாநில கர்ப்பிணி மீட்பு
திருச்சி ரயில் நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக சுற்றித் திரிந்த வடமாநில கர்ப்பிணிப் பெண் மீட்கப்பட்டார்
திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு கர்பிணி சுற்றித் திரிவதாக அறிந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், வேலா கருணை இல்ல மனநல காப்பத்தின் நிர்வாகி அனபாயனுக்கு தகவல் அளித்தார். அடுத்ததாக அங்கு சென்ற மனநல காப்பக நிர்வாகிகள், ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் சுற்றித் திரிந்த வடமாநில பெண்ணை மீட்க சென்ற போது அங்கிருந்தவர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.ஒரு வழியாக பத்திரமாக மீட்டு வந்து மனநல காப்பகத்துக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அவரிடம் விசாரித்த போது ஹிந்தியில் பேசியதில் அவருடைய பெயர் ரேஷ்மா என்றும் வீட்டு முகவரி இர்பான் ஹவுஸ், பல்ட்டீன் ஹவுஸ், தர்காரோடு, ஜின்த்தூர், மகாராஷ்டிரா மாநிலம் என்ற முகவரியை கூறி உள்ளார்.
மேலும், தனக்கு திருமணம் ஆகியதும், கணவர் கடந்த 5 மாதத்திற்கு முன் இறந்து விட்டதாகவும், என்னுடைய பெற்றோர்கள் இருக்கிறார்கள் எனவும் நான் கொண்டு வந்த பொருட்கள், பணம் எல்லாம் திருட்டு போனதாகவும் கூறி உள்ளார். மற்ற தகவல்களை அவர் கூற மறுத்து விட்டார். மேலும், அவர் உணவு,தண்ணீர் என எதையும் சாப்பிட மறுத்துள்ளார். பயத்தில் உள்ளாரா அல்லது மன ரீதியாக பாதிக்கப்பட்டரா என பரிசோதிக்கவுள்ளதாக காப்பக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கர்ப்பிணிப் பெண் உணவு சாப்பிடாமல் இருப்பதால் உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த பெண் எப்படி வீட்டைவிட்டு வெளியேறினார். எதற்காக வெளியேறி திருச்சிக்கு வந்தார் என தெரியவில்லை. தன்னுடைய பெயர் முகவரியை கூறிய பெண் மேற்கொண்டு எந்த தகவலும் கூற மறுக்கிறார்.ரயில் நிலையத்தில் என்னை விடுங்கள் நான் என் ஊருக்கு போகிறேன் என கூறி வருகிறார். தெளிவான மனநிலைக்கு வந்த பிறகு, இவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்களை கண்டுபிடித்து கர்ப்பிணியை ஒப்படைக்க உள்ளதாகவும், அதுவரை காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துக் கொள்வதாகவும் காப்பக நிர்வாகி அனபாயன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu