உலக மார்பக புற்றுநோய் மாதம்: பிங்க் நிறத்தில் திருச்சி மலைக்கோட்டை

உலக மார்பக புற்றுநோய் மாதம்: பிங்க் நிறத்தில்  திருச்சி மலைக்கோட்டை
X

திருச்சி மலைக்கோட்டை பிங்க நிறத்தில் ஒளிர்கிறது.

உலக மார்பக புற்றுநோய் மாதத்தையொட்டி திருச்சி மலைக்கோட்டையை பிங்க் நிறத்தில் ஒளிர வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உலக சுகாதார மையத்தினால் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிறப்பு மருத்துவமனை சார்பில் கடந்த சில ஆண்டுகளாக அக்டோபர் 1-ந்தேதி முதல் 30-ஆம் தேதி வரை பெண்களிடம் மார்பக புற்றுநோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை முழுவதும் இரவு நேரங்களில் இளம் சிகப்பு நிறத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. அதோடு திருச்சி முழுவதும் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது. இந்த இரு நிகழ்ச்சிகளையும் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சறுக்கு பாறை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் உதவி ஆணையர் விஜயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் மலைக்கோட்டையை இளம் சிவப்பு வண்ண விளக்குகளால் அலங்கரித்து திருச்சி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் கோவிந்தராஜ் செய்துள்ளார்.

Tags

Next Story