திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க.வில் மல்லுக்கட்டு

திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க.வில்  மல்லுக்கட்டு
X
திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க.வில் சீனிவாசன், ஜவகர்லால் நேரு, அரவிந்தன் இடையே மல்லுக்கட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது.

திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க.வில் மூன்று முக்கிய புள்ளிகள் மல்லுக் கட்டுகிறார்கள்.

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. திருச்சி மாநகராட்சி மேயர் பதவி கடந்த 4 தேர்தல்களில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. திருச்சி மாநகராட்சியின் முதல் பெண் மேயராக மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட புனிதவல்லி பழனியாண்டி பதவி வகித்தார். தனது பதவிக் காலத்திலேயே புனிதவல்லி பழனியாண்டி மரணம் அடையவே அப்போது துணை மேயராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எமிலி ரிச்சர்டு சிறிதுகாலம் மேயர் பொறுப்பு வகித்தார்.

அதன் பின்னர் இரண்டாவதாக நடைபெற்ற மேயர் தேர்தலில் சாருபாலா தொண்டைமான் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு அடுத்த தேர்தலிலும் அவர் இரண்டாவது முறையாக மேயர் பதவி வகித்தார். அதன் பின்னர் 2011 முதல் 2016வரை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏ.ஜெயா திருச்சி மாநகராட்சி மேயர் பதவியை அலங்கரித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேயர் ஜெயா மாரடைப்பினால் மரணம் அடைந்தார்.

திருச்சி மாநகராட்சியின் முதல் பெண் மேயர் புனிதவல்லி பழனியாண்டி என்றால் கடைசி பெண் மேயர் ஜெயா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சுமார் 6 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் திருச்சி மாநகராட்சி தற்போது மீண்டும் தேர்தலை சந்திக்க இருக்கிறது. வருகிற 19ஆம் தேதி திருச்சி மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மேயர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை கவுன்சிலர்கள் மூலமாக அதாவது மறைமுக தேர்தலில் மேயர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

இதன் காரணமாக ஒவ்வொரு கட்சி சார்பிலும் வெற்றி பெறும் கவுன்சிலர்களில் ஒருவர் தான் மேயராக முடியும் என்பது பொதுவான விதி. ஆதலால் மேயர் கனவுடன் இருக்கும் கவுன்சிலர் வேட்பாளர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டியது உள்ளது. மேயர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைப் பொறுத்தவரை இவர்தான் மேயர், இவர்தான் துணைமேயர் என முடிவு செய்யப்பட்டு விட்டது.

அதை அவர்கள் வாக்குப்பதிவு முடிந்து, வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரை வெளியிட மாட்டார்கள். அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ரேசில் முதலிடத்தில் இருக்கும் அ.தி.மு.க. தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது.

அந்த வகையில் திருச்சி மாநகராட்சியில் உள்ள மொத்தம் 65 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் திருச்சி மாநகராட்சியின் முன்னாள் துணை மேயரும் தற்போதைய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச் செயலாளருமான ஜெ.சீனிவாசன் 34வது வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 20வது வார்டு வேட்பாளராக திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜனின் மகன் வெல்லமண்டி ஜவகர்லால் நேரு அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி ஆவின் சேர்மன் கார்த்திகேயனின் தம்பி சி.அரவிந்தன் 14வது வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

65 வேட்பாளர்களில் இந்த மூவர் தான் மேயர் பதவிக்கு மல்லுக் கட்டுகிறார்கள். முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவகர்லால் நேரு தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி எப்படியாவது மேயர் சீட்டில் அமர வேண்டும் என்பதில் துடியாய் துடித்து வருகிறார் என்றால் சீனிவாசனும் தான் ஏற்கனவே மூன்று முறை மாநகராட்சி கவுன்சிலர் ஒருமுறை துணை மேயர் பதவி வகித்ததன் மூலம் மக்களுக்கு ஆற்றிய பணிகளை முன்வைக்கிறார். அரவிந்தனும் இவர்கள் இருவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை போல தனது அண்ணன் கார்த்திகேயனுக்கு உள்ள செல்வாக்கு தனது தந்தையாரின் செல்வாக்கு மற்றும் இதுவரை ஆற்றிய களப்பணிகள் கட்சிபணிகள் ஆகியவற்றை பயன்படுத்தி அவரும் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க.வில் மல்லுக்கட்டு இப்போதே தொடங்கிவிட்டது எனலாம்.

Tags

Next Story