திருச்சியில் 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு திட்ட ஆவணம் வெளியீடு
திருச்சியில் 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு திட்ட ஆவணத்தை அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டனர்.
HIGHLIGHTS

திருச்சி தொலை நோக்கு திட்ட ஆவணத்தை அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டனர்.
திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தொலைநோக்குத் திட்ட ஆவணத்தை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வெளியீட்டு 1115 பயனாளிகளுக்கு ரூ. 17.99 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார்கள்.
திருச்சி கலையரங்கத்தில் இன்று(22.10.2022) நடைபெற்ற விழாவில் திருச்சி மாவட்டத்தில், உட்கட்டமைப்பு, மனிதவளம், சுற்றுச் சூழல், நீர் நிலவளம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கான மக்களின் தேவைகள், திட்டங்கள், சாலை உட்கட்டமைப்பு, போக்குவரத்து, வேளாண்மை, தொழில் வளம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மேம்பாடுகள் குறித்து தயாரிக்கப்பட்ட தொலைநோக்குத் திட்ட ஆவணத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வெளியிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 193 பயனாளிகளுக்கு ரூ. 16.41 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையையும், வருவாய்த் துறையின் சார்பில் 20 திருநங்கைகளுக்கு ரூ. 8 இலட்சம் மதிப்பிலான வீட்டு மனை பட்டாக்களையும், இயற்கை இடர்பாடு நிதியின் கீழ் 1 நபருக்கு ரூ. 4 இலட்சம் நிவாரணத் தொகையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 100 நபர்களுக்கு ரூ. 12 இலட்சம் மதிப்பீட்டில் மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் 300 நபர்கள் கொண்ட உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ. 3.75 இலட்சம் துவக்கநிதியையும், மகளிர் திட்டத்தின் சார்பில் 58 பயனாளிகளுக்கு ரூ. 42.80 இலட்சம் மதிப்பீட்டில் சமூதாய முதலீட்டு நிதி மற்றும் சுழல் நிதியையும், தொழிலாளர் நலத்துறை(சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பில் 100 பயனாளிகளுக்கு ரூ. 10.07 இலட்சம் மதிப்பீட்டில் விபத்து மரணம், இயற்கை மரணம், மாதாந்திர ஓய்வூதியம், கல்வி உதவித் தொகைக்கான ஆணைகளையும், சமூக நலன் மற்றம் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 37 பயனாளிகளுக்கு ரூ. 18.50 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கான வைப்பு நிதிக்கான ஆணையும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 102 பயனாளிகளுக்கு ரூ. 1.16 இலட்சம் மதிப்பீட்டில் சான்று நெல் விநியோகமும், 198 பயனாளிகளுக்கு ரூ. 0.29 இலட்சம் மதப்பீட்டில் பாரம்பரிய நெல் விநியோகமும், 5 பயனாளிகளுக்கு ரூ. 56.40 இலட்சம் மதிப்பீட்டில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் உட்கட்டமைப்பு அமைப்பதற்கான நிதியும், 1 பயனாளிக்கு ரூ. 0.70 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் களையெடுக்கும் இயந்திரம் என மொத்தம் 1115 பயனாளிகளுக்கு ரூ.17.99 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன், இனிகோ இருதயராஜ், கதிரவன், அப்துல் சமது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் இராஜேந்திரன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.