திருச்சி பூங்காவில் 8 போட்டவர்களை ஓட ஓடவிரட்டிய பாம்பால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 61வது வார்டில் உள்ளது ஜே.கே.நகர், ஆர்.எஸ்.புரம், ஆர்.வி.எஸ். நகர் பகுதிகள். ஆர்.எஸ்.புரத்தில் 2 பூங்காக்கள் உள்ளன. சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்ப்பட்ட இரண்டு பூங்காக்களும் அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. சுற்று வட்டார பகுதி மக்கள் பலரும் இந்த பூங்காவில் குழந்தைகுட்டிகளுடன் வந்து பொழுதுபோக்கி வந்தனர்.
இந்நிலையில் கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் இந்த இரண்டு பூங்காக்களும் பராமரிப்பு இன்றி புதர் மண்டியது. மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த அளவு குப்பை கூளங்களை அகற்றி காலை மாலை நேரங்களில் நடைபயிற்சி சென்று வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை 07.30 மணியளவில் ஆர்.எஸ்.புரம் தெற்கு பூங்காவின் உள்ளே நடைபயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் 8 போடும் இடத்தில் பெரிய பாம்பை பார்த்து விட்டனர். புதர் மறைவில் படுத்து கிடந்த அந்த பாம்பு திடீர் என சீறியதால் மக்கள் ஓட்டம் பிடித்தனர். உடனடியாக இதுபற்றி 61வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜாபர் அலிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நல சங்க நிர்வாகிகள் உடனடியாக 101 ஐ தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அங்கு வந்து உரிய கருவிகளுடன் பாம்பை தேடினர். ஆனால் அந்த பாம்பு எங்கோ புதர் மறைவில் பதுங்கி ஒளிந்து கொண்டது. இதனால் அதனை பிடிக்க முடியவில்லை.
இனியாவது பூங்காவை முறையாக பராமரித்து பாம்பு தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu