கொலை, தாக்குதல் கண்டித்து திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்துடன் இணைந்த தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், திருச்சி, கடலூர், விழுப்புரம், கரூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டலம் சார்பில் திருச்சி மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர்கள் ராமலிங்கம், கோவிந்தராஜன், உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் சரவணன் கண்டன உரையாற்றினார். மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில், மாநில செயலாளர்கள் கல்யாணசுந்தரம், இளங்கோவன், மாவட்ட தலைவர்கள் அனல்முத்து, பிச்சைமுத்து, சக்திவேல், செந்தில்குமார், அன்பழகன், பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் பணியாளர்கள் வன்முறையாளர்களால் கொலை, கொள்ளை, கொடூரமாக தாக்கப்படுவது போன்ற தொடர் நிகழ்வுகள் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது. பணியாளர்களை தாக்கிய வன்முறையாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு உடனே நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுவரை நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட அனைத்து நிர்வாகத்திற்கும் கண்டனம் தெரிவித்துக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu