டாஸ்மாக் ஊழியர் கொலை: முதலமைச்சருக்கு பணியாளர் சங்கத்தினர் மனு
பைல் படம்
காஞ்சிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, டாஸ்மாக் பணியாளர்கள் பொது நல சங்கம் திருச்சி மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடையில் விற்பனையாளர்கள் துளசிதாஸ், ராமு ஆகியோர் விற்பனை முடிந்து வெளியே வரும்போது, கொடூரமான முறையில் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே துளசிதாஸ் உயிரிழந்தார். காயங்களுடன் ராமு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். பணியில் இருக்கும் போது கொலை செய்யப்பட்ட துளசிதாஸ் குடும்பத்திற்கு, அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சிகிச்சை பெற்று வரும் ராமுக்கு அதிகபட்ச இழப்பீடு தொகையும் பாதுகாப்பும் வழங்க வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அனைத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu