திருச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பற்றிய ஆய்வு கூட்டம்

திருச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பற்றிய ஆய்வு கூட்டம்

திருவெறும்பூரில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் அமைச்சர் கணேசன் மாணவர்கள் மத்தியில் அமர்ந்து தொழிற்பயிற்சி கூட்டத்தை ஆய்வு செய்தார்.

திருச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பற்றிய ஆய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது.

திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற(05.11.2022) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் தமிழக தொழிலாளர்நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே.கணேசன் தலைமையில் இன்று நடைபெற்றது.

திருச்சிமாவட்டம், அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப பயிலகத்தில், திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற(05.11.2022) சனிக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி வருகின்ற(5.11.2022) சனிக்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 66 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்று தந்துள்ளோம். கடந்த 15.10.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தனியார் தொழில் நிவனங்களில் பணிபுரியும் வகையில் 1 இலட்சமாவது பணி நியமன ஆணையை வழங்கினார்.

திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் பணியாற்றி இந்த வேலை வாய்ப்பு முகாமில் குறைந்த பட்சம் 5000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், ஒரே இடத்தில் 200க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொள்ளவுள்ளதால் வேலைநாடுநர்கள் தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அமைச்சர் கணேசன் பேசினார்.

மேலும், இம்முகாம் நடைபெறும் அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப பயிலக வளாகத்தை பார்வையிட்டு முகாமிற்கு வரும் நபர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து தேவையான பணிகளை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதை பொதுமக்கள் மற்றும் வேலைநாடுநர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விளம்பரப்பணிகளை மேற்கொள்ளும் வாகனங்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் திருவெறும்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை பார்வையிட்டு பணிமனைக் கூடம் மற்றும் வகுப்பறைகளுக்குச் சென்று மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி தொழிற்பயிற்சி நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும், இவ்வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தொழில்நுட்பவியல் மையத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவ் ராவ், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் செந்தில் குமார், மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி, மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) சந்திரன், துணை இயக்குனர் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மகாராணி, திருவெறும்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பரமேஸ்வரி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மண்டலத் தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story