முழு கட்டணம் வசூலிக்கும் பள்ளி பற்றி புகார் செய்ய அமைச்சர் வேண்டுகோள்
தமிழக பள்ளி கல்வி துறைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தி.மு.க. திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள தி.மு.க. நிர்வாகிகளுடன் விருப்ப மனுக்களை வழங்கியும், பூர்த்தி செய்து கொடுத்த மனுக்களை பெற்றும் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகார்களை மாணவிகளும், பெற்றோர்களும் தெரிவிக்கும் முறையை எளிதாக்க திட்டமிட்டுள்ளோம்.ஒவ்வொரு பள்ளியின் புகார் பலகையிலும் 14417,1098 என்ற எண்கள், இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அங்கு அருகில் உள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணையும் பதிவிட வேண்டும் என சொல்லி இருக்கிறோம்.
அலுவலர்களுடனான கூட்டத்தில்14417 புகார் மையம் எப்படிசெயல்படுகிறது என்பது குறித்துநாளை சென்னையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பது தான் அரசின் விருப்பம். பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள் யாராக இருந்தாலும் தயங்காமல் புகார் எண்ணை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்து புகார் தெரிவிக்கலாம்.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. 66 லட்சம் என்று இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 71 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. எந்தெந்த அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு அதிகம் தேவைப்படுகிறதோ அதை செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்து
மாணவர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் விருப்பம்.தனியார் பள்ளிகளில் மாணவர்களை முழு கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது. அவ்வாறு வற்புறுத்தினால் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu