திருச்சி: சம்பா நெற் பயிரை பாதுகாப்பது பற்றி வேளாண் அதிகாரி விளக்கம்
நெற்பயிர் (பைல் படம்)
திருச்சி மாவட்டத்தில் சம்பா நெற் பயிரானது, தற்போது நடவிலும் வளர்ச்சி பருவத்திலும் உள்ளது. அதிக அளவு வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பயிர்கள் பாதிப்படைந்து மஞ்சள் நிறமாக வாய்ப்புள்ளது. எனவே, அதிகப்படியான நீரை வடித்துவிட்டு, போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன் இளம் பயிர்களுக்கு ஒரு கிலோ சிங்க் சல்பேட், 2 கிலோ யூரியா ஆகியவற்றை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைகள் மீது படுமாறு தெளிக்க வேண்டும்.
பயிர் வளர்ச்சி குன்றிக் காணப்பட்டால் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை போக்கிட ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு வைத்திருந்து அக்கலவையுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து இட வேண்டும். தண்டு உருவாகும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் உள்ள பயிர்களுக்கு, 1.4 கிலோ டி.ஏ.பி. உரத்தினை 10 லிட்டர் நீரில் முதல் நாள் ஊற வைத்து மறுநாள் வடிகட்டி, அக்கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தினை, 190 லிட்டர் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும். இவ்வாறு செய்வதினால் மகசூல் இழப்பு ஏற்படாமல் காப்பற்றலாம்.
இந்த தகவலை திருச்சி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் வே.அறிவழகன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu