திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள், பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார்.
சோஷியல் டெமாக்ரடிக் ,டிரேட் யூனியன் தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அதன் தலைவர் முஸ்தபா தலைமையில் வந்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் திருச்சி நகரில் கடந்த 2013-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆட்டோ மீட்டர் கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 54 ,டீசல் 36 என இருந்த நிலையில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ. 25 ,கிலோ மீட்டருக்கு ரூ 12 என நிர்ணயம் செய்யப்பட்டது.
அதன்பின்னர் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111 ,ஒரு லிட்டர் டீசல் ரூ 103-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆதலால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கருத்தில் கொண்டு குறைந்த பட்ச ஆட்டோ மீட்டர் கட்டணம் ரூ 40, கிலோ மீட்டருக்கு ரூ 18 என நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அப்படி ஏமாற்றப்பட்டவர்களுக்கு மீண்டும் பயிர் கடன் தள்ளுபடி செய்ய மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu