திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீசார் வெடிகுண்டு கண்டறியும் சோதனை

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீசார் வெடிகுண்டு கண்டறியும் சோதனை நடத்தினார்கள்.
நாடு முழுவதும் ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட இருக்கிறது. சுதந்திர தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி உரையாற்ற உள்ளார்.
மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றுவார்கள். சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி நாசவேலையில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுவதால் நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது. எல்லையில் குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தினர் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறார்கள். தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
தீவிரவாதிகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரயில், விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் கிடைத்து இருப்பதால் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 15 -ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ரயில் நிலைய நடை மேடைகள், பார்சல் அலுவலகம், பயணிகள் உடமைகள் ஆகியவற்றில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது போலீஸ் துப்பறியும் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன. திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் இன்று ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து சோதனை நடைபெறும் போலீசார் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu