விதைநெல் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கலெக்டரிடம் மனு

விதைநெல் விற்பனையாளர்  மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கலெக்டரிடம் மனு

திருச்சி மாவட்ட கலெக்டரிடம் விதை நெல் மோசடி பற்றி புகார் செய்ய விவசாயிகள் வந்தனர்.

விவசாயிகளை ஏமாற்றிய விதைநெல் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் திருச்சி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு பொதுமக்களிடம் இருந்து குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றார். நவலூர் குட்டப்பட்டு, தாயனூர், அரியாவூர் கிராம உழவர் உற்பத்தியாளர் குழுவினர் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் சம்பா சாகுபடிக்கு நெல் நடவு செய்தோம். அதில் பல வழிகளில் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து விதை நெல்லை மாற்றி நடவு செய்ய நினைத்து ஒரு சில கடைகளில் விதை நெல் வாங்கி 700 ஏக்கரில் நடவு செய்தோம். விதை நெல்லால் விளைச்சல் பாதிக்கப்பட்டு ஏக்கருக்கு 1000 முதல் 2 ஆயிரம் கிலோ மட்டுமே கிடைக்கும். ஆகவே விவசாயிகளை ஏமாற்றிய விதைநெல் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், விதைநெல்லால் ஏற்பட்ட இழப்பீட்டை சரி செய்து தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மண்ணச்சநல்லூர், 94, கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அழுகிய மக்காச்சோள பயிர்களுடன் வந்து மனு அளித்தனர். அதில், சமீபத்தில் பெய்த மழையால் பயிர்கள் அழுகிவிட்டது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு மக்காச்சோள பயிருக்கு காப்பீடு செய்ததில், ஒரு குறிப்பிட்ட வங்கியில் இருந்து மட்டும் 100 விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்படவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Tags

Next Story