நாகை மாவட்டத்தில் காணாமல் போன சாமி சிலைகள் 29 ஆண்டுக்கு பின் மீட்பு

நாகை மாவட்டத்தில் காணாமல் போன சாமி சிலைகள் 29 ஆண்டுக்கு பின் மீட்பு

29 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட சுவாமி சிலைகளுடன் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உள்ளார்.

நாகை மாவட்டத்தில் காணாமல் போன ஐம்பொன் சாமி சிலைகள் 29 வருடங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டு உள்ளது.

தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 1992 -ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி அருகில் சன்னியாசி பனங்குடி கிராமத்திலுள்ள தாளரணேசுவரர் கோயிலில் ஆடிப்பூர அம்மன் உலோக சிலை -1, வெண்கல குடம் - 1, மணி- 1, நாகாபரணம் - 1, செம்பு கலசம் -2 உள்ளிட்ட பொருட்கள் களவு போனது தொடர்பாக திட்டச்சேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு,1993 - ஆம் ஆண்டு கண்டுபிடிக்க முடியாத வழக்காக முடிக்கப்பட்டது.

இந்நிலையில் 2017-ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்த அனைத்து சிலைத் திருட்டு வழக்குகளும் (கண்டுபிடிக்க, முடியாத வழக்குகள் உட்பட) சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட போது சில வழக்கு கோப்புகள் மாயமாகி போனதாக புகார் எழுந்தது. அந்த வகையில் நாகப்பட்டிணம் மாவட்டம் திட்டச்சேரி காவல் நிலைய வழக்கு கோப்பு எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால் சிலை திருட்டு தடுப்பு பிரிவில் கோயில் அர்ச்சகரிடம் புதிதாக புகார் பெற்று புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராஜாராம்தலைமையில் காவல் ஆய்வாளர் இந்திரா மற்றும் சார்பு ஆய்வாளர்கள் தமிழ்செல்வன், பாலச்சந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தற்போது 29 ஆண்டுகளுக்கு முன் சன்னியாசி பனங்குடி தாளரணேசுவரர் கோயிலில் களவு போன ஆடிப்பூர அம்மன் உலோகச் சிலை மற்றும் அந்த கோயில் வழிபாட்டில் இருந்த விநாயகர் உலோகச் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்தில் 16.10.2021-ஆம் தேதியில் சுமார் ரூ. 110 கோடிக்கு விற்க முயன்ற தொன்மையான சிலைகள் 1. எட்டு கை விஷ்ணு 2. சிவன் 3. எட்டு கை விஷ்ணு 4. விநாயகர் 5. நடராஜர் சிலை ஆகியவை சிலை திருட்டு தடுப்புப் போலீசாரால் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு 2 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

17.10.2021 -ஆம் தேதியில் மேல்மருவத்தூரில் I. மீனாட்சியம்மன் சிலை . 2. ரிஷப தேவர் மற்றும் 3. கிருஷ்ணர் உலோக சிலைகள் ஒரு கோடிக்கு விற்க முயன்றது கண்டுப்பிடிக்கப்பட்டு குற்றவாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் கடந்த 16.12.2021-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பந்திநலினம் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான தொன்மையான சுமார் ஒரு கோடிக்கு மேல் மதிப்புடைய சண்டிகேஸ்வரர் சாமி சிலை கீழ்மனக்குடி விஸ்வநாதஸ்வாமி கோவிலுக்கு சேர்ந்த சிலை என பதிவு செய்யப்பட்டு இருந்து வருவது கண்டுப்பிடிக்கப்பட்டு கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் 17 சிலை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 39 சிலைகள் வெவ்வேறு அருங்காட்சியகம் வெளிநாடு மற்றும் கலைக்கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்தப் செய்தியாளர்கள் சந்திப்பின் போது திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி. சரவண சுந்தர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story