திருச்சியில் காங்கிரசார் நடுரோட்டில் விறகு அடுப்புடன் நூதன போராட்டம்

திருச்சியில் காங்கிரசார் நடுரோட்டில் விறகு அடுப்புடன் போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று திருச்சி உறையூர் குறத் தெருவில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரசார் நூதன போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தின் போது காங்கிரசார் இரண்டு கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை போட்டு அதனை நாற்காலிகளின் மீது வைத்திருந்தனர். பின்னர் நடுரோட்டில் விறகு அடுப்பு வைத்து அதன்மேல் பானை வைத்து சமையல் செய்ய முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து காங்கிரசார் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் முன்னாள் மேயர் சுஜாதா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ரெக்ஸ், வில்ஸ் முத்துக்குமார், எத்திராஜ் ,முன்னாள் கவுன்சிலர் செந்தில்நாதன், மலைக்கோட்டை விக்டர் உள்பட நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த போராட்டம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu