பட்டாசு கடைகள் விதி மீறினால் உரிமம் ரத்து: போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் திருச்சி மாநகரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனை கடைநடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த நபர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது உரிய பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தற்காலிக பட்டாசு கடைகளை நடத்த அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:-
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகம், திருச்சி மாநகர ஆயுதப்படை உதவி ஆணையர் அலுவலக வளாகம், தமிழ்நாடு சிறப்புக்காவல் படைமுதலாம் அணி அலுவலக வளாகம், திருச்சி அமராவதி நுகர்வோர் கூட்டுறவு அங்காடி உள்ளிட்ட 59 நபர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தற்காலிகபட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற்ற நபர்கள் விதிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். தீயணைப்பு உபகரணங்கள் அதிக அளவில் வைத்திருக்கவேண்டும். புகைப்பிடிப்பவர்கள் மற்றும் குழந்தைகளை பட்டாசு கடை அருகில் அனுமதிக்க கூடாது.
தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையம் அல்லது 101 தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ள வேண்டும். கொரோனா தொற்று காரணமாக முகக்கவசம் கட்டாயம் அணிந்திருப்பதுடன் வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட சமூக விலகல் இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். எதிரெதிரே பட்டாசு கடைகள் நடத்தக்கூடாது.
ஒவ்வொரு பட்டாசு கடைக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பட்டாசு அளவை விட கூடுதலாக சேமிப்பு வைத்திருக்க கூடாது. கடையின் முன்பு வாகனங்கள் நிறுத்த அனுமதிக்க கூடாது. சாலை ஓரங்களில் இருக்கும் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்தல் கூடாது.
மேற்படி நிபந்தனைகள் மற்றும் வெடிபொருள் சட்டவிதிகளை உரிமதாரர்கள் மீறும் பட்சத்தில் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தற்காலிக பட்டாசு உரிமம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu