மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த வந்த விவசாயிகள் கைது

திருச்சியில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த விவசாயிகள்.
திருச்சியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த வந்த விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷண் சரண்சிங்கிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்லியில் விவசாய சங்க தலைவர்களும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையே பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லியில் 2 மாதங்களாக போராடி வரும் நிலையில் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறி பிரதமருக்கு கடிதம் அனுப்ப தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி தலைமை தபால் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்ததால் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதேபோல் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகளையும், பெண்களையும் காப்பாற்றுங்கள் என கோஷம் எழுப்பினர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு, மாநில துணைத்தலைவர் மேகராஜன், சட்ட ஆலோசகர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் மதிவாணன் உள்பட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியோர் இணைந்து தபால் நிலையம் நோக்கி பேரணியாக வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் சாலையில் படுத்து மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu