திருச்சி அரியமங்கலம் அருகே முட்புதரில் இருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்.
திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் ரெயில்வேக்கு சொந்தமான முட்புதர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் படி உதவி போலீஸ் கமிஷனர் காமராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர் முட்புதர் பகுதியில் சல்லடை போட்டு தேடினர். அப்போது அங்கு ஒரு அட்டைப்பெட்டியில் 3 நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றினர். பின்னர் அந்த வெடிகுண்டுகளை பாதுகாப்பு கருதி மண்ணச்சநல்லூர் எதுமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் வெடிமருந்து குடோனுக்கு அனுப்பி வைத்தனர். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என போலீசார் தெரிவித்தனர்.
இந்த வெடிகுண்டுகளை ரவுடி கும்பல் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கி பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அந்த பகுதியில் இரு ரவுடிகளுக்கிடையே கோஷ்டி மோதல் இருந்து வருகிறது. இதில் ஒரு ரவுடி அவரது எதிரியை தீர்த்து கட்ட அந்த வெடிகுண்டுகளை வாங்கி வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் அரியமங்கலம் மற்றும் பொன்மலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu