திருச்சியில் வேலை செய்து கொண்டிருந்த எலக்ட்ரீசியன் மயங்கி விழுந்து சாவு

திருச்சியில் வேலை செய்து கொண்டிருந்த எலக்ட்ரீசியன் மயங்கி விழுந்து சாவு
X
திருச்சி கோட்டை பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது எலக்ட்ரீசியன் மயங்கி விழுந்து இறந்தார்.

திருச்சி பெரிய கடை வீதி கிலேதார் தெருவை சேர்ந்தவர் திருக்கவேல் மகன் ரவிக்குமார் (வயது 38). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 16 வருடங்களுக்கு முன்பு வரகனேரியை சேர்ந்த அஸ்மா பேகம் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் அஸ்மா பேகம் தனது பெயரை மாலதி என்று மாற்றிக் கொண்டுள்ளார். இவர்களுக்கு 16 வயதில் ஜெய்வேல் என்கிற மகனும், 12 வயதில் அக்ஷ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரவிக்குமாருக்கும், மாலதிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இரண்டு குழந்தைகளும் மாலதி உடனே சென்று விட்டனர். இதனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரவிக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று காலை ரவிக்குமார் அவரது நண்பர் ஜாகிர் என்பவருடன் அரபிக்குளத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். அப்போது ரவிக்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதுகுறித்து ஜாகிர் கொடுத்த தகவலின் பேரில் அவரது உறவினர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரவிக்குமாரை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து ரவிக்குமாரின் தாய் நாகேஸ்வரி (வயது 62) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story